ஒரு ரயில்நிலைய நெடு-நாற்காலியில்
அவனும் அவளும் அமர்ந்திருந்தனர்.
அவனுக்கான ரயில் வந்து நிற்கிறது.
அவளுக்கான ரயிலுக்கு
அரைமணி நேரம் காத்திருக்கவேண்டும்.
இருவருக்கான ரயிலும்
எதிரெதிர் திசையிலானது.
இருவரிடமும் நேற்றிரவு
விழித்திருந்த கலக்கம்
இதோ... அவனுக்கான ரயில் கிளம்புகிறது.
தன் உடமைகளை வாரிக்கொண்டு
உள்ளேறுகையில், அவளுக்கான ரயில்
வந்துகொண்டிருக்கிறது.
அடுத்த புதன்கிழமையில்
காலையோ மதியமோ மீண்டும்
இவர்கள் சந்திக்கக் கூடும்.
அப்போது நிறைய பாசிமாலைகளும்,
லேகிய உருண்டைகளும்
மிருகமுடித் தாயத்துகளும்
விற்றுத் தீர்த்திருப்பார்கள்.